தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் ‘சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கான படத்தை ஒளிபரப்புகிறார்கள். இந்த வரிசையில் 2023, பிப்ரவரி மாதம் ஒளிபரப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் ‘மல்லி’. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மல்லி என்கிற சிறுமி, பள்ளி விடுமுறையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள குளம், மான்குட்டி, பூக்கள் போன்றவற்றிடம் பேசிக் கொண்டிருப்பாள். நகரத்திலிருந்து வந்திருக்கும் வனஅலுவலரின் மகளான ‘குக்கு’ என்கிற சிறுமி, மல்லிக்குத் தோழியாகிறாள். இருவரும் காட்டுப்பகுதிக்குள் மான்குட்டிகளாக ஓடியாடி விளையாடிக் களிக்கிறார்கள். மல்லிக்கு இரண்டு பெரிய ஆசைகள் உண்டு. ஒன்று, வருகிற திருவிழாவிற்கு பாவாடை, தாவணி அணிய வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று அவள் விவரிப்பதே அத்தனை அழகு. “உன்னிப்பூ நிறத்தில் ஜாக்கெட், புல் நிறத்தில் பச்சைப் பாவாடை, அதில் மானுக்கு இருப்பது போன்ற புள்ளிகள், ஆகாச நிறத்தில் நீலநிற தாவணி” என்று ஆசையாக ஆசையாக தன் கனவு உடையைப் பற்றி சொல்வாள். இரண்டாவது ஆசை, நீலக்கல். ஆம், கதை சொல்லும் பாட்டி சொல்லியிருக்கிறாள். மா...